#001 24/03/2024 : மகிழ்ச்சி
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கந்தசாமி என்ற இளைஞன் வாழ்ந்து வந்தான். முயற்சி என்பதை தாரக மந்திரமாக கொண்டு வாழ்ந்து வந்தான். முடியாது என்ற வார்த்தைக்கு இடம் கொடாமல் வாழ்ந்து வந்தவன் கந்தசாமி இவனது நண்பன் ராமசாமி சரியான சோம்பேறி.
ஒரு நாள் இருவரும் காட்டு வழியாக பயணப்பட நேர்ந்தது. கந்தசாமி எவ்வித சோம்பலுமின்றி காட்டை கடப்பதற்காக நடந்தான். ஆனால் ராமசாமியோ நடப்பதற்கே சோம்பல் பட்டு வழி நெடுக அமர்ந்து அமர்ந்து சென்றான். இதனால் இரவு ஆன பிறகும் காட்டைக் கடக்க முடியவில்லை.
நள்ளிரவு வந்து விட்டது “ராமு இதற்கு மேல் காட்டைக் கடக்க முடியாது இன்று இரவு இந்த காட்டிலே தங்கி விடலாம்” என்று கந்தசாமி ராமுவிடம் கூறினான். ராமசாமியும் அதற்கு ஆமோதித்தான். ராமசாமியோ சோம்பேறி ஆயிற்றே கந்தசாமிக்கு உதவ முன்வரவில்லை ஆகவே கந்தசாமி விறகுகளை சேகரிப்பதற்க்காக காட்டிற்குள் சென்றிருந்த நேரம் ராமு கொள்ளையர்களிடம் மாட்டிக் கொண்டான். இதை அறிந்த கந்தசாமி நண்பனைக் காப்பாற்றுவதற்காக கொள்ளையர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றான் அங்கே ராமு ஒரு கூண்டில் அடைக்கப்பட்டிருந்தான்.
கொள்ளையர்கள் கந்தசாமியிடம் உன் நண்பனை விடுவிக்க வேண்டும் என்றால் நாங்கள் சொல்லவதை நீ நிறைவேற்ற வேண்டும் என்றார்கள். கந்தசாமியும் அவர்கள் சொல்வதை செய்வதாகக் கூறினான். கொள்ளையர்கள் கந்தசாமியிடம் அரசர் இருக்கும் அரண்மைக்குள் செல் அங்கே கருவூலத்திலிருக்கும் அதிசய பாத்திரத்தை எங்களிடம் ஒப்படைத்தால் மட்டுமே உன் நண்பன் உன்னிடம் உயிருடன் கிடைப்பான் என்றார்கள். கந்தசாமியும் அவர்களின் சவாலை ஏற்றுக்கொண்டான்.
அரண்மனைக்குள் செல்ல வேண்டும் என்றால் அரசரின் நம்பிக்கைக்குரியவன் ஆக வேண்டும் அதற்காக யோசித்து முயற்சி செய்து செயல்பட ஆரம்பித்தான் கந்தசாமி.
ஒரு நாள் அரசர் நகர்வலம் வரும் போது கந்தசாமி முனிவனாக வேடம் பூண்டு அரசரின் ஊர்தியின் முன்பு சென்று நின்றான். அரசரிடம் “அரசே நான் கேட்கும் கேள்விக்கு பதில் கூற வேண்டும் இல்லையென்றால் இந்த கேள்விக்கு பதில் தெரிந்தவனை அரசக் கருவூலப் பொறுப்பாளராக மாற்ற வேண்டும் அவ்வாறு செய்ய விட்டால் உம் ஆட்சி இந்நாட்டில் முடிந்து விடும்” என்று கூறினான்.
அரசரும் முனிவரின் பேச்சுக்கு மறுபேச்சு கூறாமல் கேள்வியே கவனமாக கேட்டார். “இது இருந்தால் முன் வைத்த காலைப் பின் வைக்க மாட்டார்கள் இது இருந்தால் வான் வரை சென்று நிலவிலும் கால் வைக்கலாம் இது இருந்தால் உள்ளங்கையிலும் உலகை கொண்டு வரலாம் அது எது?” என்று கேட்டு முனிவர் சிரித்துக் கொண்டே சென்று விட்டார்.
அரசர் இரவும் பகலும் யோசித்தார் கேள்விக்கான பதில் தெரியவில்லை. அரசர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் அதில் கேள்விக்கான பதில் தெரிந்தவர் அரசரை சந்திக்குமாறு கூறப்பட்டு இருந்தது மேலும் பதில் அரசரை திருப்திப்படுத்தவில்லை என்றால் அவரது தலை துண்டிக்கப்படும் என்றும் பதில் அரசரைத் திருப்திப்படுத்தினால் அரச கருவூல பொறுப்பாளராக பணியமர்த்தப்படுவார் என்றும் அவ்வறிப்பில் இருந்தது.
அறிவிப்பைக் கேட்டுக் கந்தசாமியும் அரசரை சந்திக்க அரண்மனைக்குச் சென்றான் அங்கே அரசரிடம் கேள்விக்கான பதில் ‘முயற்சி’ என்று கூறினான் அரசர் விளக்கிக் கூறுமாறு கேட்க கந்தசாமியோ அரசே முயற்சி இருந்ததால் தான் என் நண்பனை காப்பாற்ற உங்கள் முன் தைரியமாக வந்து நிற்கிறேன் என்று நடந்தவை அனைத்தையும் கூறினான் மேலும் கொள்ளையர்களைப் பிடித்து தன் நண்பனை விடுவிக்குமாறுக் கேட்டு கொண்டான்.
அரசரும் கந்தசாமியின் தைரியம் மற்றும் முயற்சியை பாராட்டி கொள்ளையர்களைப் பிடிக்க இருவருமிணைத்து திட்டம் தீட்டினர். கந்தசாமி அதிசய பாத்திரத்தை கொள்ளையர்களிடம் ஒப்படைக்கும் போது அரசரும் அரசுப் படையும் பதுங்கி இருந்து கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும் என்பதே அத்திட்டம்.
திட்டத்தின் படி கொள்ளையர்கள் பிடிக்கப்பபட்டனர் ராமு விடுவிக்கப்பபட்டான் கந்தசாமிக்கு அரசு கருவூல பொறுப்பாளராக பதவியும் கிடைத்தது. ‘முயற்சி செய்தால் எதுவும் சாதிக்கலாம்’ என்பதற்கு எடுத்துக்காட்டாக கந்தசாமி வாழ்ந்து வந்தான்.
அனிரா4 பார்வையில்: முயற்சி செய்தால் கடினமான காரியங்கள் கூட எளிதாக மாறிவிடும் என்றும் அறிவார்ந்து செயல்பட்டால் எதையும் சாதித்துக்காட்டலாம் என்றும் இக்கதை அருமையாக உணர்த்துகிறது.
© 2024 Anira4.in. All rights reserved.